பரபரப்பான சாலையில் திருடுபோன பேருந்து நிழற்குடை!
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியால் ரூ. 10 லட்சத்தில் துருப்பிடிக்காத எஃகு கம்பிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட நிழற்குடை ஒரு வாரத்தில் திருடப்பட்டிருக்கிறது.
இதில், விநோதம் என்னவென்றால், பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்குப் பின்பக்கத்திலும், கர்நாடக பேரவைக் கட்டடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கும் குறைவான தூரத்தில்தான் இந்தப் பேருந்து நிழற்குடை அமைந்திருந்தது.
நிழற்குடை திருடுபோன ஒரு மாதத்துக்குப் பிறகு, செப்டம்பர் 30ஆம் தேதிதான் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகாரில், பெங்களூரு மாநகராட்சி சார்பில், பெங்களூரு மாநகருக்குள் புதிதாக பேருந்து நிழற்குடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட கன்னிகம் சாலையில் ஆகஸ்ட் 21ஆம் தேதிதான் புதிய நிழற்குடை அமைக்கப்பட்டது. அது துருப்பிடிக்காத எஃகினால் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது.
இதையும் படிக்க.. இருசக்கர வாகனக் காப்பீட்டின் அவசியம் என்ன?
அந்த நிழற்குடையை ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்று பார்வையிட்டபோது, அங்கு அது இல்லை. பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்டதற்கு, தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டனர்.
இதையடுத்துதான் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மிகவும் பரபரப்பான, எப்போதும் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் ஒரு சாலையிலேயே, பேருந்து நிழற்குடையையே யாரோ களவாடிச் சென்றிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பயணிகள் கூறுகையில், புதிய நிழற்குடை அமைக்கப்பட்ட ஓரிரு நாள்களில் அதனை அகற்றிவிட்டார்கள். ஏன் என்று தெரியவில்லை. இப்போது மழை பெய்தாலும், வெயில் அடித்தாலும் வானமே கூரையாக பயணிகள் பேருந்துகளுக்காக நிழற்குடை இல்லாத நிறுத்தத்தில் காத்திருக்கிறார்கள் என்றனர்.
இந்தப் பகுதியிலிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.