5 மாநில மற்றும் மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் ஒருபக்கம் கட்டணச் சலுகைகள் அறிவிக்கப்படுவது போல, பாஜக - காங்கிரஸ் இடையே வார்த்தைப் போரும் மூண்டுள்ளது.
ஒருவரது கொள்கைகளை மற்றொருவர் தாக்கியும் இழிவாகவும் பேசி வந்த நிலை மாறி, தற்போது சினிமா படங்களின் விளம்பரத்துக்காக வெளியிடுவது போல போஸ்டர்கள் மூலம், மற்ற கட்சித் தலைவர்களை விமரிசிக்கும் சமூக வலைத்தளப் போர் நேற்று முதல் எக்ஸ் பக்கத்தில் மூண்டுள்ளது.
மிகப்பெரிய பொய்யர் என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் போஸ்டர் போட்டு விமரிசிக்க, பாஜக பதிலுக்கு எதையும் செய்யாமல் சும்மா இருக்குமா? உடனடியாக ராகுலின் புகைப்படத்தை ராவணன் போல சித்தரித்து பதிலுக்கு ஒரு போஸ்டர் போட்டு போரைத் தொடக்கிவைத்தது.
அதாவது, காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் புகைப்படங்களை திரைப்பட போஸ்டர்கள் பாணியில் உருவாக்கி, அதற்குக் கீழே, மிகப்பெரிய பொய்யராக பிரதமர் நரேந்திர மோடி என்று தலைப்பிட்டு, பாஜக வழங்கும் என்று வெளியிடப்பட்டிருந்தது. விரைவில் தேர்தல் பேரணிக்கு வரவிருக்கிறது என்றும் அச்சிடப்பட்டிருந்தது
அதற்கடுத்த போஸ்டரில், யார் மிகப்பெரிய பொய்யர் என்ற கேள்விக்கு.. நான்தான் என்று மோடி கைதூக்குவது போல ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.
இப்படியாக, போஸ்டர் போரை வெற்றிகரமாகத் தொடங்கியது காங்கிரஸ்.
இந்த போஸ்டர் விமரிசனங்களைப் பார்த்த பாஜக, பதிலடி கொடுக்கத் தயாரானது. உடனடியாக பத்து தலை ராவணனைப் போல பல தலைகளைக் கொண்ட ராகுல் காந்தியின் போஸ்டரை தயாரித்து இந்தியா ஆபத்தில் உள்ளது என்று அதில் எழுதப்பட்டிருந்தது.
நவீன கால ராவணன் இவர். இவர் ஒரு தீயசக்தி. தர்மத்துக்கு எதிரானவர். ராமருக்கு எதிரானவர். பாரதத்தை அழிப்பதே அவரது நோக்கம் என்று பதிவிட்டிருந்தது.
உடனடியாக, பாஜகவின் போஸ்டருக்கு காங்கிரஸ் தலைவர்கள் தங்களது கடும் கண்டனத்தைப் பதிவிட்டனர். ராகுல் காந்திக்கு எதிரான போஸ்டரை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று காட்டமாகக் கூறியிருந்தது காங்கிரஸ் கட்சி.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், காந்தியை ராவணனாக சித்தரிக்கும் கொடூரமான கிராஃபிக் படத்தின் உண்மையான நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார். தொடர்ந்து இரு தரப்பிலும் கண்டனங்களும் கருத்துகளும் நேற்று முழுவதும் எக்ஸ் பக்கத்தில் போஸ்டர் போரால் நிரம்பிவழிந்தது.
இந்தநிலையில் இன்று..
அதானி, பொம்மலாட்ட பொம்மை போல பிரதமர் நரேந்திர மோடியை ஆட்டுவிப்பதாக காங்கிரஸ் இன்று ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது.