ஐந்து மாநிலத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஆட்சியமைப்போம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், மிஸோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் கர்நாடகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 'சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அங்கு மக்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.
ஐந்து மாநிலத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் பணிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
இதையும் படிக்க | ஹமாஸ் எங்களை நடத்திய விதம்...: விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய மூதாட்டி!
பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற காரணங்களால் பாஜக ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடையே ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு எதிராக மக்கள் உள்ளனர்.
பாஜக அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. வேலைவாய்ப்பு, விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு என எதையும் பாஜக நிறைவேற்றவில்லை.
மத்திய அரசின் எந்த திட்டங்களும் கர்நாடகத்திற்கு வழங்கப்படவில்லை' என்று பேசினார்.