கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே களமசேரி பகுதியில் உள்ள கிறிஸ்தவ மத கூட்டரங்கில் இன்று காலை மத வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் இரு பெண்கள் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இருப்பினும் அதில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். மத வழிபாட்டு அரங்கில் குண்டு வெடிப்பு நடந்தது எப்படி என கேரள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், தம்மனம் பகுதியைச் சேர்ந்த டோமினிக் மார்ட்டின் என்பவர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்குக் காரணம் நான்தான் என கொடக்கரா காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்டவர் ரிமோட் செயலி முறையில் ஐ.ஈ.டி வகை வெடிகுண்டு சம்பவத்தை நிகழ்த்தியது உறுதியாகியுள்ளது.
சரணடைவதற்கு முன் முகநூல் நேரலையில் தோன்றிய டோமினிக், “கிறிஸ்துவ மதப்பிரிவினரிடம் வெறுப்பைத் தூண்டும் பேச்சுகளைத் தவிர்க்க பல முறை கோரிக்கை வைத்திருந்தேன். ஆனால், அவர்கள் அதை மறுத்ததால் குண்டுவெடிப்பை நிகழ்த்தினேன்’ எனக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.