உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமர் மோடியை செவ்வாய்க்கிழமை(நாளை) சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பின்போது முதல்வர் யோகியுடன், எரிசக்தி துறை அமைச்சர் ஏ.கே சர்மாவும் கலந்துகொள்கிறார். முதல்வர் - பிரதமர் இடையேயான இந்த சந்திப்பில், அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமர் கோயில் திறப்பு விழா அடுத்தாண்டு தொடக்கத்தில் நடக்க வாய்ப்புள்ளதால் இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில் முதல்வர் யோகி உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி மாவட்டத்திற்குச் சென்று ராமஜென்ம பூமியில் கோயில் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.