மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி மக்களவையில் தெரிவித்தார்.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் நேற்று(செப். 19) மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தார்.
தொடர்ந்து இன்று மசோதா மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
இதில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, 'மகளிர் இடஒதுக்கீடு மசோதா முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கனவு. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் சார்பில் நான் ஆதரிக்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பு என்பது மிகவும் முக்கியமானது. பல்வேறு துறைகளில் அவர்கள் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார்கள்.
மசோதா நிறைவேற்றப்பட்டு தாமதப்படுத்தாமல் விரைந்து அமலுக்கு கொண்டு வர வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி எஸ்.சி. சமூகப் பெண்களுக்கு உள் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்' என்று பேசினார்.