இட்டாநகர்: கேரளத்தைச் சேர்ந்த தம்பதி உள்பட மூன்று பேரின் சடலங்கள் அருணாசலில் உள்ள தங்கும் விடுதி அறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட தகவலில், கேரள மாநிலம் கோட்டையத்தைச் சேர்ந்த நவீன் (39), தேவி (39) என்ற தம்பதியும், தேவியின் தோழி ஆர்யா பி நாயர் (29) என்பவரும் அருணாசலில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்துத்தங்கியுள்ளனர்.
இவர்கள் செவ்வாயன்று காலை கதவை திறக்காததால், சந்தேகம் அடைந்த ஊழியர்கள், காவல்துறைக்குத் தகவல் கொடுத்தன் பேரில் , அவர்கள் வந்து அறைக்குள் நுழைந்தபோது, மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், மூவரின் கை நரம்புகள் துண்டிக்கப்பட்டு மரணம் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், பிளேடால் உடலில் பல இடங்களில் அறுத்துக்கொண்ட தடயங்களும் இருந்துள்ளது என்றார்.
கேரள காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள், மார்ச் 27ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் குவகாத்தி வந்து, மார்ச் 28 தங்கும் விடுதியில் அறைஎடுத்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகள், மூவரும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும், உடல் கூறாய்வுக்காக காவல்துறையினர் காத்திருக்கிறார்கள். இதற்கிடையே, கேரள காவல்துறையினர் அருணாசலம் சென்று விசாரணையில் பங்கேற்றுள்ளனர்.
பலியான நவீனும் தேவியும் ஆயுர்வேத மருத்துவர் என்றும், இருவரும் ஒன்றாக மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளனர். ஆர்யாவும் தேவியும் பள்ளியில் ஆசிரியர்களாகப் பணியாற்றியபோது நண்பர்களாகியுள்ளனர்.
இவர்கள் மூவரும், இறப்புக்குப் பிறகான வாழ்க்கை, தனியான வாழ்க்கை போன்ற மூட நம்பிக்கைகளின்பால் ஏற்பட்ட ஈர்ப்பால், இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்றும், அவர்கள் இணையத்தில் எப்போதும் இறப்புக்குப் பிறகான வாழ்க்கை போன்ற விஷயங்களையே தேடியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].