ராஜஸ்தானை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவருமான கெளரவ் வல்லப் அனைத்து பதவிகளையும் ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிர காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிருபத்தை கட்சியில் இருந்து நீக்குவதாக இன்று காலை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், காங்கிரஸ் சார்பில் நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்பான தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று வந்த செளரவ் தனது அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பதவிகளையும் ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “திசையில்லா பாதையை நோக்கி காங்கிரஸ் சென்று கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. சநாதனத்துக்கு எதிரான கருத்துகள் கூறவோ, நாட்டை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்பவர்கள் குறித்து அவதூறு கூறவோ என்னால் முடியாது.” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சஞ்சய் நிருபம், “நேற்று இரவே கட்சியில் இருந்து விலகுவதாக நான் அறிவித்துவிட்டேன், ஆனால் கட்சியில் இருந்து காலை நீக்குவதாக கூறியுள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.