ஆர்டர் செய்த உணவு ஒரு மணி நேரமாகியும் வராததால், ஸ்விக்கி வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு போன் செய்த முதியவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.3 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே, கூகுளில் சில முக்கிய நிறுவனங்களின் சேவை மையங்களின் பெயர்களில் மோசடியாளர்கள் இணையதளங்களைத் தொடங்கி அதன் மூலம் மோசடி செய்வது தொடர்கதையாகி வருகிறது. எனவே, கூகுளில் சேவை மையங்களைத் தேடும் போது, அவை அதிகாரப்பூர்வமான இணையதளம்தானா என்பதை உறுதி செய்துகொண்ட பிறகே அதனை திறக்கவும், போனில் அழைக்கவும் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூகுளில், வாடிக்கையாளர் சேவை மையம் உள்ளிட்ட சில சேவைகளை தேடும்போது, சில மோசடியாளர்களின் இணையதளங்கள் அல்லது செல்போன் எண்கள் தேடுபொறியில் காட்டப்படுகிறது. இதனால், பலரும் தங்களது பணத்தை இழக்கும் அவல நிலை ஏற்படுகிறது.
அந்த வகையில்தான் இந்த மோசடியும் நடந்துள்ளது. இந்த மோசடியில், தனது தந்தை பணத்தை இழந்தது பற்றி, அவரது மகன் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டதன் மூலம், வெளியுலகுக்குத் தெரிய வந்துள்ளது.
ஆர்டர் செய்த உணவு ஒரு மணி நேரமாகியும் வராததால், அந்த முதியவர் கூகுளில் ஸ்விக்கி கால் சென்டர் என்று தேடியிருக்கிறார். அந்த எண்ணுக்கு போன் செய்தபோது, அது மோசடியாளர்கள் எண் என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. புகார் கொடுத்தபோது, அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.35 ஆயிரம் மோசடியாக வேறு வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளது. தனது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்தது குறித்து பேசுவதற்காக அந்த முதியவர் மீண்டும் அந்த எண்ணை அழைத்துள்ளார். பணத்தை திருப்பித் தருவதற்கு கிரெடிட் கார்டு எண் விவரங்களை கேட்டிருக்கிறார்கள்.
மீண்டும் பணம் மோசடி நடந்துள்ளது. அதன்பிறகு, அந்த முதியவரின் சிம் கார்டு க்ளோன் செய்யப்பட்டு அதன் மூலம், முதியவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.3 லட்சம் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது.
மகன் மலேசியாவில் இருக்கும் நிலையில், தனது தந்தைக்கு உதவுமாறு அவர் தில்லி காவல்துறையின் உதவியை நாடியிருக்கிறார். நடந்த மோசடி குறித்து விரிவாகப் பேசி அதனை விடியோவாகப் பதிவிட்டும் உள்ளார்.