உ.பி.யில் குண்டு காயங்களுடன் 12ஆம் வகுப்பு மாணவனின் சடலம் வயலில் இருந்து மீட்பு

உ.பி.யில் குண்டு காயங்களுடன் 12ஆம் வகுப்பு மாணவனின் சடலம் வயலில் இருந்து மீட்பு

உத்திரப் பிரதேசத்தில் குண்டு காயங்களுடன் 12ஆம் வகுப்பு மாணவனின் சடலம் வயல்வெளியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலம், சஹாஸ்பூர் ஜாட் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜோகிந்தர் சிங்கின் மகன் ஆதித்யா(19). 12ஆம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவனை நேற்றிரவு 8 மணியளவில் இரண்டு இளைஞர்கள் வந்து இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். இரவு வெகுநேரமாகியும் அந்த ஆதித்யா வீடு திரும்பாததையடுத்து, அவரது குடும்பத்தினர் மாணவனின் கைப்பேசி எண்ணில் அழைத்தனர். ஆனால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் அவருடன் பேச முடியவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை, சில விவசாயிகள் ஆதித்யாவின் சடலத்தை அவரது வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் வயல் ஒன்றின் அருகே கிடப்பதைக் கண்டு, அவரது குடும்பத்தினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்துக்கு விரைந்த காவல்துறையினர் ஆதித்யாவின் மார்பில் இரண்டு தோட்டாக் காயங்கள் இருப்பதைக் கண்டனர். இதனால் அந்த மாணவன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

சனிக்கிழமை இரவு ஆதித்யாவை அழைத்துச் சென்ற இருவரையும் அவர்கள் விசாரித்து வருகின்றனர். மேலும் இறந்த ஆதித்யாவின் கைப்பேசி எண்ணையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இருப்பினும் இறந்த மாணவனின் குடும்ப உறுப்பினர்களால் இதுவரை எந்த புகாரும் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு மாணவனின் சடலம் குண்டு காயங்களுடன் வயல்வெளியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com