கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான், ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21-ஆம் தேதி கைது செய்தது. கேஜரிவாலை ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கேஜரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் கூட்டு உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி இன்று(ஏப்ரல் 7) அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி பஞ்சாப் மாநிலம், ஷாஹீத் பகத் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள கட்கர் காலன் என்ற இடத்தில் முதல்வர் பகவந்த் மான், ஆம் ஆத்மி அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காட்கர் காலன் என்பது சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் பூர்வீக கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது.