தில்லி சமூக நலத் துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை ராஜிநாமா செய்தார். மேலும், ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சிறையிலுள்ள நிலையில், தேர்தல் வியூகங்களை அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் வகுத்துவரும் நிலையில், அமைச்சர் ஆனந்த் ஆம் ஆத்மியிலிருந்து விலகியுள்ளார். a
மக்களவைத் தேர்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சியிலிருந்து அமைச்சர் தனது ராஜிநாமா செய்து கட்சியிலிருந்து விலகியது இந்தியா கூட்டணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
ஊழல் குறித்த ஆம் ஆத்மி கட்சியின் கொள்கையில் அதிருப்தி ஏற்பட்டதால், இனியும் இக்கட்சியில் நீடிக்க முடியாது என ராஜ்குமார் குறிப்பிட்டுள்ளார்.
ஊழலுக்கு எதிராக போராடும் நிலையான முடிவால் கவரப்பட்டு ஆம் ஆத்மியில் இணைந்ததாகவும், சமூகத்துக்கு ஆம் ஆத்மி வழியாக சேவை செய்ய நினைத்ததாகவும் சுட்டிக்காட்டிய ராஜ்குமார், தற்போது ஊழலுக்கு மத்தியில் ஆம் ஆத்மி திளைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் கட்சியிலிருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார்.