பாஜக தலைவர்களின் ஹெலிகாப்டர்களில் சோதனை நடத்த மத்திய அரசுத் துறைக்கு துணிச்சல் கிடையாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் மத்திய அரசமைப்பு நிறுவனங்களை பாஜக அரசு தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை முடக்கப்பார்ப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
பிரசாரத்தின்போது திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜியின் ஹெலிகாப்டரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதனிடையே கூச் பெஹார் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் மம்தா பானர்ஜி ஈடுபட்டிருந்தார். அப்போது பேசிய அவர், வருமான வரித் துறை அதிகாரிகள் அபிஷேக் பானர்ஜியின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்துகின்றனர். அதில், எதையும் அவர்கள் கண்டறியவில்லை.
ஹெலிகாப்டரில் தங்கம் மற்றும் பணம் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டதாக கூறுகின்றனர். ஆனால், ஹெலிகாப்டரில் ஒன்றும் இல்லை என்பது சோதனைக்குப் பிறகு அவர்களுக்கு தெரியவந்தது.
இதுபோன்ற செயல்களின் பின்னணியாக பாஜக செயல்படுகிறது. ஆனால், பாஜக தலைவர்களின் ஹெலிகாப்டர்களில் சோதனை செய்ய அதிகாரிகள் துணிவார்களா? எனக் கேள்வி எழுப்பினார்.
முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான நாள் நெருங்கும் சமயத்தில் தேசிய புலனாய்வு முகமை மூலம் எதிர்க்கட்சியினரை கைது செய்ய பாஜக நினைப்பதாகவும் மம்தா விமர்சித்தார்.