அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் சிலைப் பிரதிஷ்டை விழாவுக்கு அனுப்பப்பட்ட அழைப்புகளை நிராகரித்த சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக விமரிசித்துப் பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
இரண்டு இளவரசர்கள் இணைந்து நடிக்கும் இந்தியா கூட்டணியை உத்தரப்பிரதேச மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இணைந்து வைத்திருக்கும் கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும், இவர்கள் நமது நம்பிக்கையை உடைத்தெறிகிறார்கள்,
ஏற்கனவே மக்களால் நிராகரிக்கப்பட்ட இவர்கள் இணைந்து மீண்டும் நடிக்கிறார்கள். இவர்களை மக்கள் மீண்டும் புறக்கணிக்க வேண்டும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டபோது, சமாஜ்வாதியும், காங்கிரஸ் கட்சியும் சிலைப் பிரதிஷ்டை விழாவுக்கு அனுப்பிய அழைப்பிதழை நிராகரித்தனர். நாள்தோறும் இவர்கள் ராமர் கோயிலையும் சநாதன தர்மத்தையும் அவதூறாகப் பேசி வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக இன்று தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் சேர்த்து 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அடுத்தக்கட்ட தேர்தல் நடைபெறவிருக்கும் தொகுதிகளில் முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.