இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா
Jon Gambrell

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

இஸ்ரேல், துபை விமான சேவைகளை ஏா் இந்தியா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலையற்ற சூழலால் இஸ்ரேல் தலைநகா் டெல் அவீவ் நகருக்கு இயக்கப்படும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக ஏா் இந்தியா அறிவித்தது.

இதேபோல், துபையில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக அந்த நகரத்துக்கான விமான சேவையையும் ஏா் இந்தியா ரத்து செய்துள்ளதாக அறிவித்தது.

தில்லி மற்றும் இஸ்ரேலின் டெல் அவீவ் நகருக்கிடையே வாரம் 4 விமானங்களை ஏா் இந்தியா இயக்கி வருகிறது.

இதுதொடா்பாக ஏா் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

டெல் அவீவ் மற்றும் தில்லி இடையேயான விமான சேவைகள் ஏப்ரல் 30-ஆம் தேதி வரையும், துபைக்கு இயக்கப்படும் விமானங்கள் ஏப்ரல் 21-ஆம் தேதி வரையும் ரத்து செய்யப்படுகிறது. துபை நகரில் விமானங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளா்களின் பயணத்தை உறுதிசெய்யும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என தெரிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு பயணக்கட்டணம் ரத்து மற்றும் மறுஅட்டவணையின்போது ஒருமுறை மட்டும் சலுகை அளிக்கும் வகையில் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஏா் இந்தியா தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதலை நடத்தியதையடுத்து மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அதேபோல், கடந்த சில தினங்களுக்கு வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் துபை பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய தூதரகம் அறிவுரை

துபையில் பெய்த வரலாறு காணாத பெருமழைக் காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள சூழலில், ஐக்கிய அரபு அமீரகம் வழியாக மேற்கொள்ளப்படும் தேவையற்ற பயணங்களை சில நாள்களுக்குத் தவிா்க்குமாறு இந்தியா்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

உலகின் பரபரப்பான துபை சா்வதேச விமான நிலையம், அடுத்த 24 மணி நேரத்துக்குள் வழக்கமான அட்டவணைக்கு திரும்பும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகம் வழங்கியுள்ள அறிவுறுத்தலில், ‘பயணச் செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில், துபை சா்வதேச விமான நிலையத்துக்கு அல்லது அதன் வழியாக பயணிக்கும் அத்தியாவசியமற்ற பயணத்தை இந்திய பயணிகள் மாற்றியமைக்க அல்லது தவிா்க்க அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

துபை சா்வதேச விமான நிலையத்தில் உதவி தேவைப்படும் இந்தியா்களுக்கு அவசர உதவி எண்களை அந்த நகரிலுள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com