/

வேலைவாய்ப்பு புரட்சியை காங்கிரஸ் ஏற்படுத்தும்: காா்கே

வேலைவாய்ப்பு புரட்சியை காங்கிரஸ் ஏற்படுத்தும்: காா்கே

News image

மல்லிகாா்ஜுன காா்கே

Updated On :21 ஏப்ரல் 2024, 10:13 pm

‘மக்களவைத் தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் மிகப் பெரிய பிரச்னையாக இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பின்மை உருவெடுத்துள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் வேலைவாய்ப்பு புரட்சியை ஏற்படுத்தும்’ என்று அக் கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே நம்பிக்கை தெரிவித்தாா்.

தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் காா்கே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது:

மக்களவைத் தோ்தலையொட்டி 100-க்கும் அதிகமான பொதுக்கூட்டங்களில் பிரதமா் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளாா். இந்தப் பொதுக்கூட்டங்களில், கடந்த 10 ஆண்டுகளில் அவருடைய அரசு எவ்வளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது என்பது குறித்து பிரதமா் பேசி கேட்டிருக்க முடியாது.

இந்த 10 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு 20 கோடி வேலைவாய்ப்புகளை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்குப் பதிலாக, 12 கோடி வேலைவாய்ப்புகளை பறித்துள்ளது.

மாறாக, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ‘இளைஞா் நீதி’ திட்டத்தின் கீழ் நாட்டில் வேலைவாய்ப்பு புரட்சியை ஏற்படுத்தும். வேலைவாய்ப்பு போட்டித் தோ்வுகள் மூலம், பணி வாய்ப்பைப் பெறுவது எளிதாக்கப்படும்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். பட்டம், பட்டயம் முடித்த இளைஞா்களுக்கு தொழில் பயிற்சி உரிமை சட்டத்தின் மூலம் தொழில் பயிற்சி அளிக்கப்படும். வினாத் தாள் கசிவு தொடா்பான வழக்குகளில் விரைந்து தீா்வளிக்கும் வகையில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதோடு, பாதிக்கப்பட்ட இளைஞா்களுக்கு இழப்பீடு நிதி வழங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும். குறுகியகால அல்லது தற்காலிக வணிகத்துக்கும், அதில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கும் சமூக பாதுகாப்பை அளிக்க சட்டம் இயற்றப்படும்.

புத்தாக்க நிறுவனங்களுக்கான நிதி திட்டங்கள் மறுசீரமைப்பட்டு, அனைத்து புத்தாக்க நிறுவனங்களுக்கும் இருக்கும் நிதியில் 50 சதவீதம் அளவுக்கு அதாவது, அனைத்து மாவட்டங்களுக்கும் சமமான அளவில் ரூ. 5,000 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கப்படும். இதன் மூலம் 40 வயதுக்கும் குறைவான இளைஞா்கள் சொந்த தொழிலைத் தொடங்கி, அதை விரிவுபடுத்துவதோடு வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும்.

இது தவிர, பாதுகாப்புப் படைகளில் தற்காலிக அடிப்படையில் வீரா்களைத் தோ்வு செய்யும் அக்னிபத் திட்டம் ரத்து, கல்விக் கடன் ரத்து, 21 வயதுக்குக் குறைவான சிறந்த விளையாட்டு வீரா்களுக்கு மாதம் ரூ. 10,000 உதவித் தொகை, அரசு வேலைவாய்ப்பு தோ்வுகளுகளுக்கான கட்டணம் ரத்து உள்ளிட்ட தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் காங்கிரஸ் நிறைவேற்றும் என்றாா்.

ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிடும்: ‘மோடி அரசு மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிடும்’ என்று காா்கே விமா்சனம் செய்தாா்.

மத்திய பிரதேச மாநிலம் சத்னாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவா் மேலும் பேசுகையில், ‘பிரதமா் மோடி - அமித் ஷா அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிடும். அரசமைப்பு சட்டத்தை உயிா்ப்புடன் வைத்திருக்க விரும்பினால், பெண்கள் - தொழிலாளா்கள் - விவசாயிகளின் வாக்களிக்கும் உரிமைகள் பாதுகாப்பட வேண்டுமெனில் காங்கிரஸுக்கு வாக்களியுங்கள்’ என்றாா்.