ஆண்டுக்கு வெறும் ரூ.6 லட்சம் சம்பளத்துடன் வேலை : ஐஐடி பட்டதாரிகளுக்கே இந்த நிலைமையா..
மிக அதிக சம்பளத்துடன் வேலை வாய்ப்பு பெறும் ஐஐடி பட்டதாரிகளுக்கே, இந்த வளாக நேர்காணல்களில் மிகக் குறைவான ஊதியத்துடன்தான் பணி வாய்ப்பு கிடைக்கப்பெற்றிருப்பது கல்லூரி மாணவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
புதிய பணிக்கு வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்கள், துவக்க ஊதியத்தை மிகக் குறைவாக நிர்ணயித்திருப்பது, பல முக்கிய நிறுவனங்களில் பணியாள்கள் குறைப்பு போன்றவை ஐஐடி பட்டதாரிகள், மிகக் குறைந்த ஊதியத்தில் கிடைத்த வேலையை ஏற்றுக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான ஐஐடி பட்டதாரிகளுக்கு சராசரியாக ஆண்டுக்கு 10 - 15 லட்சத்தில் வேலை கிடைத்திருக்கிறது. மிகக் குறைந்த அளவாக சிலருக்கு ஆண்டுக்கு ரூ.6 லட்சத்தில் கூட வேலை கிடைத்திருக்கிறது.
இதன் காரணமாக, வளாக தேர்வில் வேலை வாய்ப்பு பெற்ற மாணவர்களும், பெரிய நிறுவனங்களில் வேலை தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வேலை வாய்ப்பு முகாம்கள், இணையத்தில் வேலை வாய்ப்பு சேவைகளை பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
சர்வதேச அளவில் வேலைவாய்ப்பில் ஏற்பட்டிருக்கும் மந்தநிலையில், ஐஐடி வளாகத் தேர்வுகளிலும் எதிரொலித்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் பணி வாய்ப்பு இந்த முறை குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு 5 முதல் 8 பணி வாய்ப்புகளை வழங்கிய நிறுவனங்கள் இந்த ஆண்டு 1 முதல் 2 பேருக்குத்தான் பணி வழங்கியிருக்கிறது. சிலருக்கு இன்னமும் பணி வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு சிலர் ஆண்டுக்கு 3 லட்சம் பணி வாய்ப்பைக் கூட ஏற்கும் நிலையில் உள்ளனர். எனவே, மென்பொருள் நிறுவனங்களைத் தவிர்த்து தனியார் பயிற்சி மையங்களில் வேலை வாய்ப்பு பெறும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.