விவிபேட் வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளதாகவும், தீர்ப்பு பின்னர் வழங்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றம் (கோப்புப்படம்)
உச்சநீதிமன்றம் (கோப்புப்படம்)

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும், ஒப்புகைச் சீட்டையும் முழுமையாக ஒப்பிட்டு பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது எதிா்க்கட்சிகள் தொடா்ந்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றன. எந்த பொத்தானை அழுத்தினாலும் குறிப்பிட்ட ஒரு சின்னத்துக்கு வாக்குகள் செல்லும் வகையில் இயந்திரத்தை மாற்றியமைக்க முடியும் என பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இக்குற்றச்சாட்டுகளை தோ்தல் ஆணையம் தொடா்ந்து மறுத்து வருகிறது.

இதனிடையே, தோ்தல் மீது மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும், ஒப்புகைச் சீட்டையும் முழுமையாக எண்ணி ஒப்பீடு செய்ய தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் என்ற தன்னாா்வ அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை கடந்த 18-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு தீா்ப்பை ஒத்திவைத்தது.

இந்த நிலையில், இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விவிபேட் தொடர்பான வழக்கில் சில கேள்விகள் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம் (கோப்புப்படம்)
ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பட பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

"மைக்ரோ கண்ட்ரோலர் கருவி கண்ட்ரோலிங் யூனிட்டில் உள்ளதா? அல்லது ஒப்புகைச் சீட்டு கருவியில் உள்ளதா? மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒரு முறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யும் வசதி உள்ளதா? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தேர்தல் ஆணையத்தை சேர்ந்த அதிகாரிகள் பிற்பகல் 2 மணிக்கு ஆஜராகி, நீதிபதிகளின் கேள்விக்கான விளக்கங்களை அளிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, 2 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்த தேர்தல் ஆணைய அதிகாரி, “கண்ட்ரோலிங் யூனிட், பேலட் யூனிட் மற்றும் விவிபேட் ஆகிய மூன்றும் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர் கருவி உதவியுடன் இயங்குவதாகவும், அனைத்தும் ஒருமுறை பொருத்தினால் மாற்ற முடியாது” என்று தெரிவித்தனர்.

மேலும், வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் மூன்று இயந்திரங்களும் தனித்தனியாக சீல் வைக்கப்பட்டு 45 நாள்கள் பாதுகாக்கப்படும் என்றும், ஏதேனும் வழக்கு தொடரப்பட்டால் குறிப்பிட்ட இயந்திரம் மட்டும் பாதுகாக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளதாகவும், தீர்ப்பு பின்னர் வழங்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தற்போது மக்களவைத் தோ்தல் நடைபெற்று வரும் சூழலில், இவ்வழக்கின் தீா்ப்பு குறித்து பெரும் எதிா்பார்ப்பு நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com