கேரளாவில் வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றுவரும் நிலையில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது மகக்ள் வாக்களித்துள்ளனர். அதிகாரபூர்வ தகவல்படி 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.
2.77 கோடி வாக்காளர்கள் கொண்ட மாநிலம் கேரளா. இங்குள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது.
கடந்த ஒரு வாரமாக கேரளத்தில் வெப்பநிலை 40 டிகிரியைத் தொட்டுள்ள நிலையில் தேர்தல் நாளான வெள்ளிக்கிழமையும் வெயில் சுட்டெரித்தது. இருந்தபோதும் மக்கள் பல வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்துள்ளனர்.
கேரளத்தில் 2019 மக்களவைத் தேர்தலில் 77.67 சதவிகிதம் வாக்குகள் பதிவானது. இதனை விட அதிக சதவிகிதம் வெள்ளிக்கிழமை பதிவாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி என மூன்று தரப்பு வேட்பாளர்களும் சுயேட்சைகளும் 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
கடந்த முறை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 19 தொகுதிகளிலும் இடதுசாரிகள் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.