பீமதாரா: சத்தீஸ்கர் மாநிலம் பீமதாரா பகுதியில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது டிரக் மோதிய விபத்தில் 9 பேர் இறந்த நிலையில், 23 பேர் படுகாயம் அடைந்தனர்.
சுப நிகழ்ச்சி ஒன்றில், கலந்து கொண்டுவிட்டு, உறவினர்கள் 30க்கும் மேற்பட்டோர், ஒரு டிரக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, கத்தியா கிராமம் அருகே, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.
விபத்தில் சிக்கியவர்கள் பத்தாரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், சரக்குகள் ஏற்றப்பட்ட லாரி, சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், நள்ளிரவில் டிரக் வந்துகொண்டிருந்தபோது, லாரி நின்றிருப்பதை ஓட்டுநர் கவனிக்காததால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த விபத்தில் 5 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர். 23 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இருபப்தாகக் கூறப்படுகிறது.