லக்னெ: லக்னௌ மாவட்ட சிறைச் சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு 9 பெண் கைதிகளை அழைத்துச் சென்ற வேனில் திடீரென தீ பற்றிய நிலையில், அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
தீயணைப்புத் துறையினர் தீயை அணைப்பதற்குள், வேன் முழுவதும் தீ பரவி எரிந்து நாசமானது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவில் ஆளுநர் மாளிகைக்கு அருகே இந்த தீ விபத்து நேரிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வேனில், கைதிகளுடன் 14 பெண் காவலர்களும் இருந்தனர். நல்வாய்ப்பாக அனைவரும் பதிரமாக வேனிலிருந்து வெளியேற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாலையில் சென்றுகொண்டிருந்த வேனில் தீப்பற்றியதாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும் இரண்டு வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
வேனில் இருந்த பேட்டரியிலிருந்து தீப்பொறி பறந்ததைப் பார்த்த ஓட்டுநர், உடனடியாக வேனை சாலையோரம் நிறுத்தி, அதிலிருந்து கைதிகள் மற்றும் பெண் காவலர்கள் வெளியேறச் சொன்னதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.