அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
Published on

புது தில்லி: தில்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கைது செய்யப்பட்டது குறித்து அமலாக்கத்துறையிடம் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், அது குறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

தில்லி கலால் கொள்கை விவகாரத்தில் முதல்வா் அரவிந்த் கெஜரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில், அமலாக்கத் துறை தன்னை கைது செய்ததை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் முதல்வா் கெஜரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, கூடுதல் சொலிசிடர் ஜெனரல் எஸ்.வி. ராஜூவுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வாழ்க்கை மற்றும் சுதந்திரம் எப்போதுமே மிகவும் முக்கியம். அதனை நீங்கள் ஒருபோதும் மறுக்க முடியாது என்று குறிப்பிட்டனர்.

மேலும், பல்வேறு கேள்விகளை எழுப்பிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, வழக்கின் அடுத்த விசாரணையின்போது, அமலாக்கத் துறை சார்பில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

விசாரணையின்போது, அரவிந்த் கெஜரிவால் தரப்பில் மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி ஆஜரானார்.

முன்னதாக, நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள், ‘விசாரணை நீதிமன்றத்தில் அரவிந்த் கேஜரிவால் இன்னமும் ஜாமீன் மனு தாக்கல் செய்யாதது ஏன்?’ என கேள்வி எழுப்பினா். இதற்கு பதிலளித்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, ‘கேஜரிவாலின் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது. ஆகையால், ஜாமீன் மனு தாக்கல் செய்யாததற்கு சட்டவிரோத கைது நடவடிக்கை உள்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com