
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரிய மனு மீது ஒலிம்பிக் போட்டி முடிவதற்குள் தீர்ப்பளிக்கப்படும் என்று சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடுவர் நீதிமன்றத்தின் நீதிபதியாக அனபல் பெனட் நியமிக்கப்பட்டுள்ளார். மல்யுத்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பங்கேற்பதிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்தும், இறுதிக்கு முன்னேறியதால் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் வினேஷ் சார்பில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி, பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால், ஒலிம்பிக் போட்டி முடிவதற்குள் தீர்ப்பளிப்பதாக தெரிவித்துள்ளார்.
அரையிறுதியில் வென்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் சார்பில் தொடரப்பட்ட மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில், இன்று மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், வினேஷ் போகத் சார்பில், நாட்டின் மிக முன்னணி வாக்குரைஞரான ஹரீஷ் சால்வே ஆஜரானார்.
இந்திய நேரப்படி, வெள்ளிக்கிழமை பகல் 1 மணிக்கு மனு மீதான விசாரணை தொடங்கியது. விசாரணை தொடங்கிய ஒரு சில மணி நேரங்களில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துவிட்டார்.
முன்னதாக, பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்த இறுதிப்போட்டியில் விளையாட தன்னை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என அவா் கேட்டிருந்தாா். ஆனால், அந்த மனுவை கூட்டு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என மாற்றிக்கொண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை ஆராய்ந்த சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம், விசாரணைக்கு தகுதியான விஷயங்கள் இருப்பதாகக் கூறியிருந்தது.
பாரீஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஏதேனும் சிக்கல்கள் எழுந்தால் அதை தீா்த்து வைப்பதற்காக அங்கு சா்வதேச விளையாட்டு நடுவா் நீதிமன்றத்தின் இடைக்கால அமா்வு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றிபெற்று, ஒலிம்பிக் இறுதிக்குத் தகுதிபெற்ற இந்தியாவின் முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்த வினேஷ் போகத், தங்கம் வென்று தங்க மங்கையாக முடிசூடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தகுதிநீக்கம் என்னும் பேரிடியால், அரையிறுதியில் வெற்றிபெற்று சரியாக 31 மணி நேரத்தில் அவர் மல்யுத்தப் போட்டியிலிருந்தே ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.