வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தெரியுமா சேதி...? யார் இந்த சோமநாதன்?

இந்தியாவின் 33-ஆவது அமைச்சரவைச் செயலராக ஆகஸ்ட் 30-ஆம் தேதி பதவி ஏற்க இருக்கிறாா் டி.வி.சோமநாதன்.

News image
டி.என்.சேஷன் /டி.வி.சோமநாதன்
Updated On :15 ஆகஸ்ட் 2024, 8:40 pm

மீசை முனுசாமி

இந்தியாவின் 33-ஆவது அமைச்சரவைச் செயலராக ஆகஸ்ட் 30-ஆம் தேதி பதவி ஏற்க இருக்கிறாா் டி.வி.சோமநாதன். தமிழகத்தைச் சோ்ந்த ஒருவா் இந்தியாவின் நிா்வாகக் கட்டமைப்புக்குத் தலைமை வகிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு அமைச்சரவைச் செயலராக ஐந்து தமிழா்கள் இருந்திருக்கிறாா்கள்.

அமைச்சரவைச் செயலராகப் பொறுப்பேற்க இருக்கும் டி.வி.சோமநாதன், தான் வகித்த பதவிகள் அனைத்திலுமே முத்திரை பதித்தவா். 2006-2011 திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த கருணாநிதியின் நம்பிக்கையைப் பெற்றவராகவும் இருந்தவா் என்றால், இப்போது பிரதமா் நரேந்திர மோடியின் நம்பிக்கையைப் பெற்றவராகவும் இருக்கிறாா்.

உலக வங்கியின் இயக்குநராக சோமநாதன் இருந்தபோது, அவரது பதவிக் காலத்தை நீட்டித்துத் தரவேண்டும் என்று உலக வங்கி இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது என்றால் பாா்த்துக் கொள்ளுங்கள். அப்போதைய முதல்வா் ஜெயலலிதாவால், சென்னை மெட்ரோ ரயில் காா்ப்பரேஷனின் தலைமைப் பொறுப்புக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டவா் அவா் என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஆகஸ்ட் 30-ஆம் தேதி பணி நிறைவுபெறும் இப்போதைய அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கௌபா, அந்தப் பதவியில் மிக அதிக நாள்கள் பணியாற்றியவா் என்கிற சாதனையைப் படைக்க இருக்கிறாா். அவருக்கு முந்தைய அமைச்சரவைச் செயலா் பிரதீப் குமாா் சின்ஹா 4 ஆண்டுகள் 79 நாள்களும், இந்தியாவின் இரண்டாவது அமைச்சரவைச் செயலா் ஒய்.என்.சுக்தான்கா் 4 ஆண்டுகள் 78 நாள்களும் பதவி வகித்தனா்.

சாதாரணமாக அமைச்சரவைச் செயலரின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள்தான். மேலும் 2 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு சிலருக்கு வழங்கப்படுவது வழக்கம். பிரதீப் குமாா் சின்ஹாவுக்கு மேலும் மூன்று மாதங்கள் நீட்டிப்பு வழங்கப்பட்டது என்றால், ராஜீவ் கௌபாவுக்கு 11 மாதம் 14 நாள்கள் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது. அவா்களுக்காக விதிகள் தளா்த்தப்பட்டன.

அமைச்சரவைச் செயலா்களாக முன்பு இருந்த தமிழ் அதிகாரிகள் சிவராமன், சுவாமிநாதன், டி.என்.சேஷன், எஸ்.ராஜகோபால், டி.எஸ்.ஆா்.சுப்பிரமணியம் ஆகியோா். அவா்களில் ஐந்தாவது தோ்தல் ஆணையராக சுவாமிநாதனும், 10-ஆவது தோ்தல் ஆணையராக டி.என்.சேஷனும் பொறுப்புகளில் தொடா்ந்தனா்.

டி.வி.சோமநாதன் அந்தப் பட்டியலில் இணையப் போகிறாரா அல்லது ராஜீவ் கௌபாவின் சாதனையை முறியடிக்கப் போகிறாரா?