

புதுதில்லி: நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இன்டர்குளோப் ஏவியேஷன் லிமிடெட் (இண்டிகோ) பன்முகத்தன்மை அதிகரிக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருவதால், தனது பணியாளர்களில் பெண் விமானிகளின் எண்ணிக்கையை அடுத்த ஆண்டில் 1,000க்கும் அதிகமாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது குறித்து இண்டிகோவின் குழும தலைமை மனிதவள அதிகாரி சுக்ஜித் எஸ் பஸ்ரிச்சா தெரிவித்ததாவது:
பெண்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை நாங்கள் சுமார் 30 சதவிகிதம் வளர்ந்துள்ளோம். எங்கள் நிறுவனத்தில் அதிக பெண் விமானிகள் உள்ளனர். தற்போது இண்டிகோவில் 800-க்கும் மேற்பட்ட பெண் விமானிகள் பணியாற்றி வருகின்றனர்.
உலகில் மற்ற நிறுவனங்களில் 7 முதல் 9 சதவிகித பெண் விமானிகளுடன் ஒப்பிடும்போது, இண்டிகோவில் சுமார் 14 சதவிகித பெண் விமானிகள் பணி புரிந்து வருகின்றனர். ஆகஸ்ட் 2025க்குள் 1,000 பெண் விமானிகளின் எண்ணிக்கையை நாங்கள் கடப்போம்.
தினமும் 2,000 க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கும் எங்கள் நிறுவனத்தில் தற்போது 5,000 க்கும் மேற்பட்ட விமானிகள் உள்ளனர்.
நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக இண்டிகோ நிறுவனம் தனது ஏர்பஸ் மற்றும் ஏடிஆர் விமானங்களில் 77 பெண் விமானிகளை இன்று முதல் பணியில் அமர்த்தியுள்ளது.
மார்ச் 31, 2024 நிலவரப்படி, விமான நிறுவனத்தில் 5,038 விமானிகள் மற்றும் 9,363 கேபின் குழுவினர் உள்பட 36,860 நிரந்தர ஊழியர்கள் இருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.