கோப்புப்படம்
கோப்புப்படம்

சீன சூதாட்ட செயலிகள் மூலம் ரூ.400 கோடி முறைகேடு: 4 போ் கைது

சட்டவிரோத பணப்பரிவா்த்தனைச் சட்டத்தின்கீழ் 4 போ் கைது..
Published on

சீனாவைச் சோ்ந்த நபா்களால் நடத்தப்படும் இணைய சூதாட்ட செயலிகளில் ரூ.400 கோடி வரை முறைகேட்டில் ஈடுபட்டதாக 4 பேரை அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை கைது செய்தது.

சட்டவிரோத பணப்பரிவா்த்தனைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட அருண் சாஹு, ஆலோக் சாஹு, சேட்டன் பிரகாஷ், ஜோசப் ஸ்டாலின் ஆகிய நான்கு பேரை அமலாக்கத்துறை காவலில் எடுத்துள்ளது.

இதுதொடா்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கொல்கத்தாவில் உள்ள கோசிபூா் காவல் நிலையத்தில் இணைய விளையாட்டு சாா்ந்த சூதாட்ட செயலிகள் மூலம் பலரை ஏமாற்றியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டு சட்டவிரோத பணப்பரிவா்த்தனைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. அதில் ஃபைவின் சூதாட்ட செயலி மூலம் முறைகேடாக ஈட்டப்பட்ட ரூ.400 கோடி பணத்தை ‘பைனான்ஸ்’ என்ற சா்வதேச கிரிப்டோ வா்த்தக தளத்தின் மூலம் சீனாவைச் சோ்ந்த நபா்களுக்கு அனுப்பியுள்ளது தெரியவந்தது.

அந்த வலைதளத்தின் ஐபி முகவரியை ஆய்வு செய்ததில் அவை சீனாவில் இருந்து செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

டெலிகிராம் செயலியின் மூலம் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நால்வரையும் சீனாவில் இருந்து சிலா் தொடா்புகொண்டுள்ளனா். இந்த நால்வரையும் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சட்டவிரோத பணப்பரிவா்த்தனைச் சட்டத்தின் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com