அனில் அம்பானியின் ரூ.3,716 கோடி பங்களா முடக்கம்! அமலாக்கத்துறை நடவடிக்கை!
ிலையன்ஸ் குழுமத் தலைவரும், பிரபல தொழிலதிபருமான அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.3,716 கோடி மதிப்பிலான பங்களாவை பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது: வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மோசடி செய்தது குறித்து அமலாக்கத் துறை பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, மும்பையில் பாலி ஹில் பகுதியில் இருக்கும் அனில் அம்பானியின் பிரமாண்ட பங்களாவை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
அந்த பங்களா 66 மீட்டா் உயரமுடையது. மொத்தம் 17 தளங்கள் அதில் உள்ளன. அதற்கு அபோட் என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன் மதிப்பு ரூ.3,716. 83 கோடி ஆகும்.
இதையும் சோ்த்து, அனில் அம்பானிக்கு எதிரான வழக்கில் இதுவரை ரூ.15,700 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடா்பான விசாரணைக்காக கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல்முறை அமலாக்கத் துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜராகி வாக்குமூலம் அளித்தாா். விரைவில் அவரிடம் 2-ஆவது முறையாக அமலாக்கத் துறை விசாரணை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
