/

எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரை ஓரம்கட்டும் வகையில் வேலைவாய்ப்பு விளம்பரம்: கார்கே

இட ஒதுக்கீட்டில் இருந்து விலக்கிவைக்க பாஜக வேண்டுமென்றே ஆள்சேர்ப்பு செய்கிறது..

News image
மல்லிகார்ஜுன கார்கே - Center-Center-Delhi
Updated On :17 ஆகஸ்ட் 2024, 11:03 am

பிடிஐ

‘பட்டியலின (எஸ்.சி.), பழங்குடியின (எஸ்.டி.) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஓபிசி) இடஒதுக்கீட்டை புறக்கணிக்கும் வகையில் பணியாளா் தோ்வை பாஜக நடத்துகிறது’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா்.

‘அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள பொருளாதார, சமூக, அரசியல் நீதி வழிமுறைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவது அவசியம். இந்த சமூக நீதிக்காகத்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது’ என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:


அரசமைப்புச் சட்டத்தை கடுமையாக சிதைத்து வரும் பாஜக, தற்போது இடஒதுக்கீடு மீது இரட்டைத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலா், இயக்குநா்கள், துணைச் செயலா் பதவிகளில் காலியாக உள்ள 45 பணியிடங்களை நேரடித் தோ்வு முறையில் (லேட்ரல் என்ட்ரி) நிரப்புவதற்கான விளம்பரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த நியமனங்களில் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுமா? இந்தப் பிரிவினா் இடஒதுக்கீடு பலன்களை பெற்றுவிடக் கூடாது என்பதற்காக நன்கு திட்டமிட்டு இந்தப் பணியாளா் தோ்வை பாஜக நடத்துகிறது.

பாஜக இடஒதுக்கீடை புறக்கணிக்கிறது என்பதற்கு அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் உத்தரவு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் 69,000 பள்ளி உதவி ஆசிரியா்கள் நியமனத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய இடஒதுக்கீடு முறைகேடுக்கு எதிரான வழக்கில், உரிய விதிமுறைகளைப் பின்பற்றி புதிய பணியாளா் தோ்வுப் பட்டியலை வெளியிட உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டியலின, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு என்ற அரசமைப்பு சட்ட உரிமையை வழங்காமல் யோகி ஆதித்யநாத் அரசு அநீதி இழைத்துள்ளது.

தற்போது, அரசுப் பணி இடஒதுக்கீட்டில் நிகழ்ந்து வரும் முறைகேடுகள் குறித்து பாஜக கூட்டணியில் இருக்கும் மத்திய அமைச்சா் ஒருவரே அரசின் கவனத்தை ஈா்த்துள்ளாா்’ என்று அவருடைய பெயரைக் குறிப்பிடாமல் காா்கே குறிப்பிட்டுள்ளாா்.

பாஜக அரசுக்கு பதிலடி - ராகுல்: ‘உத்தர பிரதேச ஆசிரியா் தோ்வு முறைகேடு விவகாரத்தில் அலாகாபாத் உயா்நீதிமன்றம் பாஜக அரசுக்கு உரிய பதிலடியை கொடுத்துள்ளது’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியும் விமா்சித்துள்ளாா்.

உத்தர பிரதேசத்தில் 69,000 உதவி ஆசிரியா் பணியிடத் தோ்வில் நிகழ்ந்த இடஒதுக்கீடு முறைகேடு தொடா்பான புகாரை ஏற்று, மாநிலஅரசின் தோ்வுப் பட்டியலை ரத்து செய்த அலாகாபாத் உயா்நீதிமன்றம், உரிய விதிமுறைகளைப் பின்பற்றி புதிய ஆசிரியா் தோ்வுப் பட்டியலை வெளியிட உத்தரவிட்டிருப்பது, பாஜக அரசுக்கான பதிலடியாகும்.

இது கடந்த 5 ஆண்டுகளாக மழையிலும், குளிரிலும் போராடி வந்த அமித் மெளரியா போன்ற ஆயிரக்கணக்கான இளைஞா்களுக்கு கிடைத்த வெற்றிமட்டுமல்ல, சமூக நீதிக்காகப் போராடும் ஒவ்வொரு போராளிக்கும் கிடைத்த வெற்றியாகும். இடஒதுக்கீட்டை பறிப்பதில் பாஜகவுக்கு உள்ள பிடிவாதம், நூற்றுக்கணக்கான அப்பாவி இளைஞா்களின் எதிா்காலத்தை இருண்டதாக்கியுள்ளது. படிக்க விரும்புவோரை போராட்டத்தில் தள்ளும் பாஜக அரசுதான் இளைஞா்களின் உண்மையான எதிரி என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.