
மகாராஷ்டிரத்தில் பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் இன்று (ஆக. 20) தடியடி நடத்தினர்.
மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்திற்குட்பட்ட பத்லாப்பூரில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒரு குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் கழிப்பறை செல்லும்போது அவர்களைப் பின் தொடர்ந்து சென்ற, அதே பள்ளியில் பணிபுரியும் நபர் குழந்தைகளிடம் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து பள்ளி மாணவ, மாணவர்களின் பெற்றோர்கள், மக்கள் உள்ளிட்ட பலர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பள்ளி வளாகங்கள் சூறையாடப்பட்டன.
இதேபோன்று பத்லாபூரில் உள்ள ரயில் நிலையத்தில் ரயில்களை மறித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் மறியல் போராட்டத்தால், மும்பை மாநகரின் மத்திய வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் பத்லாபூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
ரயில் நிலையத்தில் பதற்றம் நிலவியதால், பாதுகாப்பிற்காக காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஒருகட்டத்திற்கு பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து, பள்ளியின் முதல்வரை நேற்று (ஆக. 19) பணியிடைநீக்கம் செய்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி அலுவலக உதவியாளர் போக்சோ சட்டத்தில் கடந்த 17-ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.