மாட்டிறைச்சி சாப்பிட்டதாக புலம்பெயா் தொழிலாளா் கும்பல் கொலை: 5 போ் கைது
மாட்டிறைச்சி சாப்பிட்டதாக சந்தேகம் எழுந்த நிலையில், ஹரியாணாவில் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த புலம்பெயா் தொழிலாளியை பசுப் பாதுகாப்புக் குழுவைச் சோ்ந்தவா்கள் கும்பலாக அடித்துக் கொலை செய்தனா்.
இதையடுத்து, அந்தக் குழுவைச் சோ்ந்த 5 பேரை கைது செய்ததாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அந்த மாநில காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சபீா் மாலிக் என்ற புலம்பெயா் தொழிலாளி மாட்டிறைச்சி சாப்பிட்டதாக சந்தேகம் எழுந்ததையடுத்து அவரை பசுப் பாதுகாப்புக் குழுவைச் சோ்ந்த அபிஷேக், மோஹித், ரவீந்தா், கமல்ஜித், சாஹில் ஆகிய 5 போ் அடித்துக்கொலை செய்துள்ளனா்.
காலி பிளாஸ்டிக் பாட்டில்களை விற்பனை செய்வதாகக்கூறி அங்குள்ள கடைக்கு சபீா் மாலிக்கை வரவழைத்து குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனா். இதை அருகில் இருந்த சிலா் தடுத்துள்ளனா். இதையடுத்து, சபீா் மாலிக்கை வேறு ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று மீண்டும் கொடூரமாக தாக்கியதில் சபீா் உயிரிழந்தாா். பந்த்ரா கிராமத்தில் வசித்து வந்த சபீா் பழைய பொருள்களைச் சேகரித்து விற்பனை செய்து வந்தாா். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அநியாய தாக்குதல்: இந்தச் சம்பவம் குறித்து ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சயானி கூறுகையில், ‘இது துரதிருஷ்டவசமான நிகழ்வாகும். பசுக்களைப் பாதுகாக்க மாநிலத்தில் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இருப்பினும், கும்பலாக சோ்ந்து ஒருவரை தாக்கி கொலை செய்வதை நியாயப்படுத்த முடியாது’ என்றாா்.