
தொகுதி மாற்றம் எந்த மாற்றமும் ஏற்படுத்தாது என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெறுவதையடுத்து ஆம் ஆத்மி இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. அதில் 18 பேர் நீக்கப்பட்டு, புதிய முகங்கள் இடம் பெற்றுள்ளன. இரண்டு எம்எல்ஏ.க்கள் இடமாற்றப்பட்டுள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் எம்எல்ஏவாக பதவி வகித்துவந்த பட்பர்கஞ்ச் தொகுதி சிசோடியாவிடமிருந்து நழுவியுள்ளது. சிசோடியாவுக்கு பட்பர்கஞ்ச் தொகுதிக்குப் பதிலாக ஜங்புரா தொகுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி சிசோடியாவிற்கு பதிலாக பட்பர்கஞ்ச் தொகுதிக்கு சமீபத்தில் இணைந்த பயிற்சி நிபுணர் அவத் ஓஜாவை நியமித்துள்ளது.
ஆம் ஆத்மி தலைவர் சிசோடியா செவ்வாயன்று தனது புதிய தொகுதியான ஜங்புராவில் உள்ளூர் மக்களுடன் அனுமன் சாலிசா பாராயணத்தில் கலந்துகொண்டு தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.
இதுதொடர்பாக சிசோடியாவின் எக்ஸ் பதிவில்,
நாங்கள் எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் உங்களின் ஆசிரவாதங்கள் எங்களுக்கு அருள வேண்டும் என்று அனுமனிடம் பிரார்த்தனை செய்துகொண்டேன். மனித நேயத்தின் ஒளி எப்போதும் நம் இதயங்களில் ஒளிரும். நாம் எங்கிருந்தாலும், எதைச் செய்தாலும் கடவுளை நினைத்து அதைச் செய்கிறோம்.
ஓஜாவுக்கு பட்பர்கஞ்ச் தொகுதியை விட்டுக் கொடுத்தற்குக் காரணம் கல்வியின் மீதான அவரது பார்வை மற்றும் பக்திதான். தொகுதி முக்கியமல்ல.. மக்களுக்குச் செய்யப்படும் பணிதான் முக்கியம் என்று அவர் கூறினார்.
இருப்பினும், பட்பர்கஞ்ச் தொகுதியில் சிசோடிய மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அவரது பாதுகாப்பிற்காக ஜங்புராவுக்கு மாறிவிட்டதாகவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
2020ல், பட்பர்கஞ்சில் பாஜக ரவி நேகியை எதிர்த்துப் போட்டியிட்ட சிசோடியா, 3,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.