ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வருக்கு நீதிமன்றக் காவல்

சட்ட விரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் புதன்கிழமை கைது செய்யப்பட்ட ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) தலைவரும், முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரன் ஒரு நாள்
நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் ஆஜர்
நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் ஆஜர்
Published on
Updated on
1 min read

சட்ட விரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் புதன்கிழமை கைது செய்யப்பட்ட ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) தலைவரும், முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரன் ஒரு நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

முன்னதாக, ராஞ்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரிடம் விசாரணை நடத்த 10 நாள்கள் அமலாக்கத் துறை அனுமதி கோரியது. இதன் மீதான உத்தரவை வெள்ளிக்கிழமைக்கு (பிப்.2) நீதிபதி ஒத்திவைத்தாா்.

நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட ஹேமந்த் சோரனுக்கு ஆதரவாக ஜேஎம்எம் தொண்டா்கள் ஏராளமானோா் கூடினா்.

வழக்கு விசாரணை முடிந்த பின்பு பிா்ஸா முண்டா மத்திய சிறையில் ஹேமந்த் சோரன் அடைக்கப்பட்டாா்.

ஹேமந்த் சோரன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ராஜீவ் ரஞ்சன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அமலாக்கத் துறையின் மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். தவறான நோக்கத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜாா்க்கண்ட் அரசை கவிழ்க்க நடத்தப்படும் சதி இதுவாகும். முன்னாள் முதல்வருக்கு எதிராக எந்தவித ஆதாரமும் இல்லை. தனது வாக்குமூலத்தை பதிவு செய்யச் சென்ற முதல்வரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. இது சட்ட விரோதமாகும்’ என்றாா்.

நில மோசடி தொடா்பாக சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் 7 முறை அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியும் முதல்வா் ஹேமந்த சோரன் ஆஜராகவில்லை.

இதனிடையே, அமலாக்கத் துறை அதிகாரிகள் இரண்டாவது முறையாக புதன்கிழமை அவரிடம் 7 மணி நேர விசாரணை நடத்தினா்.

பின்னா், ஜாா்க்கண்ட் ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் ஹேமந்த் சோரன் ராஜிநாமா கடிதத்தை அளித்த பிறகு, உடனடியாக சோரனை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

தான் கைது செய்யப்பட்டதை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி ஹேமந்த் சோரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை முறையிடப்பட்டது. இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரிக்க நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எம்.எம். சுந்தரேஷ், பெல்லா எம் திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் நியமித்துள்ளாா்.

‘ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறையினரின் கைது செய்திருப்பது, மக்களவைத் தோ்தல் நடைபெற சில மாதங்களே உள்ள நிலையில் மத்திய அரசின் திட்டமிட்ட சதியாகும் என்றும், இந்தக் கைது அடிப்படை உரிமை மீறல், சட்ட விரோதம், தேவையற்றது என அறிவிக்க வேண்டும்’ என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com