கணவரின் சந்தேகத்தால் 12 ஆண்டுகள் வீட்டுக்குள் சிறைவைக்கப்பட்ட பெண்
மைசூரு: கர்நாடக மாநிலம் மைசூரு அருகே, கணவரின் சந்தேகத்தால், 12 ஆண்டுகள் தனது வீட்டுக்குள்ளேயே ஒரு பெண் சிறைவைக்கப்பட்டிருந்த விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கணவர் சன்னலைய்யாவின் சிறைக் கொடுமையிலிருந்து மனைவியை வெளியே கொண்டு வந்ததில், அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலரின் முன் முயற்சிகள்தான் காரணமாக அமைந்துள்ளன.
மனைவியை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்து சித்ரவதை செய்வது குறித்து, அப்பகுதி மக்கள் பல முறை சன்னலைய்யாவை வலியுறுத்தியும், அவர் தனது நடத்தையை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை.
இதையும் படிக்க.. பூனம் பாண்டேவை பலிகொண்ட கருப்பை வாய் புற்றுநோய்: யாருக்கு வரும்?
இந்த நிலையில்தான், இது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்து, அப்பெண்ணை மீட்க உதவியிருக்கிறார்கள்.
சம்பவம் குறித்து கிராமத்தினர் கூறுகையில், சன்னலைய்யாவின் மூன்றாவது மனைவி சுவாதி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் அவரது வீட்டிலேயே சிறைவைக்கப்பட்டிருந்தார். இதனை கண்டித்து பஞ்சாயத்தார் பல முறை கண்டித்தும் சன்னலைய்யா மாற்றிக்கொள்ளவில்லை. ஏற்கனவே, அவரது இரண்டு மனைவிகளும் அவரது நடவடிக்கை பிடிக்காமல்தான் அவரை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள்.
தினமும் காலையில் அவரது வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது மூன்று பூட்டுகளைப் போட்டுவிட்டுத்தான் செல்வாராம். அனைத்து ஜன்னல்களும் ஆணி அடித்து வைக்கப்பட்டிருக்குமாம். ஒருவர் என்ன நினைத்தாலும் வீட்டிலிருந்து தப்பிக்க முடியாதபடி சிறைவைக்கப்பட்டிருந்தார் என்கிறார்கள் கிராமத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து சென்று பெண்ணை மீட்ட காவல்துறையினர் இருவருக்கும் மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். இதுவரை வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகத் தகவல்கள் எதுவும் இல்லை.