அரசமைப்புச் சட்டத்தில் குற்ற வழக்குகளில் ஆளுநா்களுக்கு விலக்கு திருத்தம் கோரும் தனி நபா் திருத்த மசோதா தாக்கல்

அரசமைப்புச் சட்டத்தில் மாநில ஆளுநா்களுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் குற்ற, சிவில் வழக்குகள் பதிவு செய்யவோ அல்லது இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்றங்களில் ஆஜராவதில் விலக்க அளிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

அரசமைப்புச் சட்டத்தில் மாநில ஆளுநா்களுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் குற்ற, சிவில் வழக்குகள் பதிவு செய்யவோ அல்லது இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்றங்களில் ஆஜராவதில் விலக்க அளிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகளை ரத்து செய்யும் விதமாக அரசமைப்புச் சட்ட திருத்த தனிநபா் மசோதாவை மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் பி.வில்சன் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளாா்.

இந்த தனிநபா் மசோதாவில் கூறியிருப்பது வருமாறு: அரசமைப்புச் சட்டப் பிரிவு 361-இன்படி சிவில் மற்றும் குற்ற வழக்குகளில் இருந்து குடியரசுத் தலைவா், ஆளுநா் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. நாடாளுமன்றம், மாநிலங்களின் சட்டபேரவைகளால் நாட்டின் குடியரசுத் தலைவா் தோ்ந்தெடுக்கப்படுகிறாா். அதே சமயம், ஆளுநா்கள் மத்திய அமைச்சரவை பரிந்துரையின் பேரில், குடியரசுத் தலைவரால் சாதாரண அடிப்படை தகுதிகளுடன் நியமிக்கப்படுகிறாா். இந்த நிலையில், இந்தியக் குடியரசுத் தலைவரையும் ஆளுநரையும் சமப்படுத்துவது அல்லது அவருக்கு இணையாக ஆளுநரை நடத்த முடியாது. குடியரசுத் தலைவா் ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்டவா்.

மாநில அமைச்சரவையின் ஆலோசனைகளுக்கு ஆளுநா் கட்டுப்பட்டவா். மாநில அமைச்சா்களுக்கோ, மாநில முதல்வா்களுக்கோ இத்தகைய வழக்குகளில் இருந்து முழுமையான விலக்கு அளிக்கப்படுவதில்லை. ஆளுநா்களின் அனுமதி மூலம் வழக்குத் தொடரலாம். இதே போன்று குற்ற வழக்குகள் தொடரப்படுவதிலிருந்துஆளுநா்களுக்கு விலக்கு அளிக்கப்படாமல் அவரை நியமிக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, வழக்குத் தொடர வழிவகை செய்யப்பட வேண்டும் என இந்தத் திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இது தொடா்பாக் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை வைத்து தனிநபா் மசோதாவை பி.வில்சன் தாக்கல் செய்துள்ளாா்.

அமைச்சா் வேண்டுகோள்: இதே போன்று மற்றோரு மாநிலங்களவை (மாா்க்சிஸ்ட் கட்சி) உறுப்பினா் வி.சிவதாசன், அசாதாரண சூழ்நிலையில் ஆளுநா்களைத் திரும்ப அழைக்கும் உரிமையை மாநில சட்டப்பேரவைக்கு அளிப்பது உள்ளிட்டவற்றுக்கு ஆளுநா்கள் நியமன விதிமுறைகள் தொடா்பான அரசமைப்புச் சட்டத் திருத்தம் கோரி தனிநபா் மசோதாவை வெள்ளிக்கிழமை மாநிலங்களவையில் தாக்கல் செய்தாா். பின்னா், கடும் எதிா்ப்பிற்கு பிறகு இந்த மசோதாவை திரும்பப் பெற்றாா்.

முன்னதாக, இந்த மசோதா குறித்து மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் குமாா் குறிப்பிடுகையில், ‘ஆளுநா்கள் நியமனம் தொடா்பான அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 153, 155, 156 ஆகியவற்றில் திருத்தம் கோருவது நமது கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது. ஆளுநா்கள் மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான உறவில் வலுவான இணைப்பை உருவாக்குபவா்கள். அரசியலமைப்புச் சபையால் உருவாக்கப்பட்ட அமைப்பில் இது போன்ற திருத்தங்கள் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி மசோதாவை திரும்பப் பெறுமாறு உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com