பிகாரைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தெலங்கானாவிற்கு வந்து சேர்ந்தனர்.
பிகாரில் தனது பதவியை ராஜிநாமா செய்து, நிதீஷ் குமார் புதிதாக பதவியேற்றதைத் தொடர்ந்து அவரின் தலைமையிலான ஆட்சியின் மீது பிப்ரவரி 12ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
பிகார் முதல்வரான நிதீஷ் குமார் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்து, தேசிய ஜனநாயக கூட்டணியுடன் சேர்ந்து மீண்டும் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.
நிதீஷ் குமார் தலைமையில் தற்போது புதிய ஆட்சி அமைந்துள்ளதால், பிகார் சட்டப்பேரவையில் நிதீஷ் குமார் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்றால், பிகாரில் நிதீஷ் குமார் தலைமையிலான ஆட்சி நீடிக்கும்.
பிகார் சட்டப்பேரவையில் பிப்ரவரி 12ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதனையொட்டி பிகாரைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் தெலங்கானாவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் புதிதாக பதவியேற்றுள்ள ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சம்பய் சோரன் தலைமையிலான ஆட்சி மீது நாளை (பிப். 4) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அம்மாநில காங்கிரஸ் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகளின் உறுப்பினர்கள் தெலங்கானாவில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். தற்போது பிகார் காங்கிரஸ் உறுப்பினர்களும் ஹைதராபாத் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடலாம் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.