புதுதில்லி : ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு முழு ஆதரவளிப்பதாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ஒரே நாடு, ஒரே தேர்தல் உயர்மட்டக் குழுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்க்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது,
அடிக்கடி தேர்தல் நடத்துவது பொருளாதாரத்திற்கு நல்லதல்ல, அது பொருளாதார வளர்ச்சியை சீர்குலைக்கிறது. ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு பெரும் தொகை செலவிடப்படுகிறது. ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும், நகராட்சி மற்றும் கிராமப்புற பஞ்சாயத்துகளுக்கும் தேர்தல் நடத்துவது, தேர்தல் ஆணையம் மற்றும் அரசுக்கு மட்டுமல்ல, அரசியல் கட்சிகளுக்குமான தேர்தல் செலவை குறைக்கும்.
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கொண்டுவந்துள்ள மிக முக்கிய சீர்திருத்தங்களுல் இதுவும் ஒன்று. ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறை சுமூகமான அரசு நிர்வாகத்திற்கு வழிவகுக்கும் என்று ஆழமாக நம்புவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.