கோவாவில், சுற்றுலா பயணிகளிடம் வளையல் விற்பனை செய்து வரும் பெண் ஒருவர், மிகச் சரளமாக ஆங்கிலத்தில் பேசி அசத்தும் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.
ஒருகையில் விதவிதமான வளையல்களை வைத்துக்கொண்டு, அவர் இந்த கரோனா மற்றும் பொதுமுடக்கக் காலத்துக்குப் பிறகு ஏற்பட்ட சமூக மாற்றங்கள் குறித்து நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசுகிறார்.
அவர் தனது சிறு வயது முதலே, தனது பெற்றோருடன் இங்கே வந்து சுற்றுலா பயணிகளிடம் வளையல் விற்பனை செய்து வருவதாகவும், அவர்களிடம் முதலில் ஓரிரு வார்த்தைகளை ஆங்கிலத்தில் பேசத் தொடங்கி படிப்படியாக இவருக்கு ஆங்கிலம் சரளமாக பேசும் மொழியாக மாறியிருக்கிறது.
இவர் பள்ளி சென்றதேயில்லையாம். வளையல் விற்கும்போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பேசும் ஆங்கிலத்தை புரிந்து கொண்டு, அவர்களுக்கு பதில் சொல்லி அப்படியே ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டுள்ளாராம்.
இந்த விடியோவை பார்க்கும் மக்கள் பலரும் தங்களது ஆச்சரியத்தையும் பாராட்டுகளையும் பகிர்ந்து வருகிறார்கள்.