புது தில்லி : மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று(பிப்.5) பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மீது கடுமையான விமர்சனங்களை பிரதமர் மோடி முன்வைத்தார்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அறிக்கையில், ’நாம்(இந்தியர்கள்), ஐரோப்பியர்கள், ஜப்பானியர்கள், சீனர்கள், ரஷியர்கள் மற்றும் அமெரிக்கர்களை போல கடுமையாக உழைப்பதில்லை. மேற்குறிப்பிட்ட சமூகங்கள் அனைத்தும், ஏதோ மாயாஜாலம் செய்து செழிப்படைந்தனர் என்று எண்ண வேண்டாம். அவர்கள் கடும் உழைப்பால் சாதித்துள்ளனர்’ என்று முன்னாள் பிரதமர் நேருவின் உரையை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசினார்.
இதன்மூலம், முன்னாள் பிரதமர் நேரு, இந்தியர்களை சோம்பேறிகள் மற்றும் அறிவாற்றல் குறைந்தவர்களாக நினைத்திருந்ததாக பிரதமர் மோடி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். விவசாயிகளுக்கு எந்த உரிமையையும் கொடுக்காமல் காங்கிரஸ் வைத்திருந்ததாகவும், காங்கிரஸ் கட்சியில் விவசாயிகள் ஏமாற்றப்பட்டதாகவும் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.
அதேபோல, இடையூறுகள் வரும்போது நம்பிக்கையை இழந்து துவண்டு விடுவார்கள் என்று நாட்டு மக்களை குறைத்து மதிப்பிட்டு, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பேசியிருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
இதனைத் தொடர்ந்து, பிரதமரின் பேச்சை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ், ‘பிரதமர் மோடி ஆழ்ந்த பாதுகாப்பின்மை மற்றும் மனக்குழப்பத்தில் இருப்பதால், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மீது கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்’ என்று அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
முன்னாள் பிரதமர் நேரு மீதான பிரதமரின் விமர்சனங்களுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.இன்று(பிப்.6) தனது எக்ஸ் தளத்தில் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளதாவது, “பாஜக தலைவர்களான அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் லால் கிருஷ்ண அத்வானி ஆகியோர் ஒருபோதும் இவ்வாறு செய்ததில்லை. ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகளால் பிரதமர் மோடி, அவர் வகிக்கும் உயர் பதவியை துஷ்பிரயோகம் செய்கிறார்.
மாநிலங்களவையிலும் இன்று(பிப்.6) பிரதமர் மோடி இதேபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவார் என்பதில் சந்தேகமில்லை.ஆழ்ந்த பாதுகாப்பின்மை மற்றும் மனக்குழப்பத்தில் பிரதமர் மோடி இருப்பதால், நேரு மீது அரசியல் ரீதியாக இல்லாமல், தனிப்பட்ட முறையில் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். நேருபோபியா என்ற நஞ்சு இந்தியாவில் ஜனநாயக கொலைக்கு வழிவகுத்து வருகிறது.
இதுவே மக்களவையில் பிரதமராக, மோடியின் கடைசி உரை என்ற முடிவுக்கு நாட்டு மக்கள் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் வந்துவிட்டனர்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.