மத்திய அரசுக்கு எதிராக தில்லி ஜந்தர்மந்தரில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான போராட்டம் தொடங்கியது.
கேரளத்தின் கடன் வாங்கும் வரம்பு மற்றும் வருவாய் பற்றாக்குறை மானியத்தை குறைத்த மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு, கேரள மாநில ஆளுநரைக் கண்டித்தும், மாநில உரிமைகள், கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்கும் வகையிலும் தில்லி ஜந்தர்மந்தரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கேரள மாநில இடது ஜனநாயக அரசு போராட்டம் நடத்தி வருகிறது.
கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்தில், மாநில அமைச்சர்கள், ஆளுங்கட்சியின் எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த போராட்டத்தின்போது பினராயி விஜயன் பேசியது:
“மத்திய அரசுக்கு எங்களது வலுவான எதிர்ப்பை பதிவு செய்யவும், நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை பாதுகாக்கவும் நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம். அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்துவதற்கான போராட்டத்தை தொடங்கியுள்ளோம். இன்றைய நாள், இந்திய வரலாற்றில் சிவப்பு எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நாளாக இருக்கப் போகிறது.” எனத் தெரிவித்தார்.
கேரள மாநில அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.