

கச்சார் (அஸ்ஸாம்): கச்சார் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரான போலீசார் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி மதிப்புள்ள 20,000 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
இது குறித்து கச்சார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நுமல் மஹத்தா கூறுகையில், ராம்நகரில் இரு சக்கர வாகனத்தில் போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், கச்சார் காவல்துறையினர் மற்றும் 39 பட்டாலியன் அஸ்ஸாம் ரைபிள்ஸ் வீரர்கள் இணைந்து மசிம்பூர் ராம்நகர் பகுதி-5 கிராமத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் காவல்துறையினரின் சோதனையில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது, அவரை மறித்து பிடித்த காவலர்கள் அவரது வாகனத்தை சோதனையிட்டனர். இதில், அவரிடம் இருந்து ரூ.4 கோடி மதிப்புள்ள 20 ஆயிரம் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
போதைப்பொருள்கள் தடுப்புச்சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.