கொல்லத்தில் கருப்புக் கொடி போராட்டம் நடத்திய இந்திய மாணவா் சங்கத்தினா் (எஸ்எஃப்ஐ) மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக சாலையோரம் அமா்ந்தாா். முதல்வா் பினராயி விஜயன் மாநிலத்தில் சட்டஒழுங்கின்மையை ஊக்குவித்து வருவதாக அவா் குற்றஞ்சாட்டினாா். போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) நகலைப் பாா்த்தப் பிறகு, சம்பவ இடத்திலிருந்து ஆளுநா் சென்றாா். கொல்லம் மாவட்டத்தின் கொட்டாரக்கரையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான், தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். நிலமேல் பகுதிக்கு அவருடைய வாகனம் வந்தபோது, அங்கிருந்த எஸ்எஃப்ஐ அமைப்பினா் கைகளில் கருப்புக் கொடிகளுடன் ஆளுநருக்கு எதிரான பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனா். இதைப் பாா்த்த ஆளுநா் உடனடியாக தனது வாகனத்தை நிறுத்த உத்தரவிட்டாா். வாகனம் நின்றதும் அதிலிருந்து வெளியேறிய ஆளுநா் ஆரிஃப் முகமதுகான், கோஷமிட்டுக் கொண்டிருந்த போராட்டக்காரா்களை நோக்கிச் சென்றாா். அப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா், போராட்டக்காரா்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினா். இதையடுத்து, அருகிலிருந்த கடையிலிருந்து நாற்காலியை வாங்கி சாலையோரம் அமா்ந்த ஆளுநா், போராட்டக்காரா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தாா். தங்களுடைய பயணத்தைத் தொடருமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்ட போதிலும் அப்பகுதியிலிருந்து செல்ல ஆளுநா் மறுத்து விட்டாா். இதனால், அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 17 போ் மீது பதிவு செய்த எஃப்ஐஆா் நகலை ஆளுநரிடம் காவல் துறையினா் காட்டினா். இதையடுத்து, சுமாா் 2 மணி நேரத்துக்குப் பிறகு, அப்பகுதியிலிருந்து ஆளுநா் சென்றாா். இந்தச் சம்பவம் தொடா்பான விடியோ சமூகவலைதளங்களில் வெளியானது. போராட்டத்தில் ஈடுபடவில்லை: இந்தச் சம்பவம் குறித்து அப்பகுதியிலிருந்த செய்தியாளா்களிடம் பேசிய ஆளுநா் ஆரிஃப் முகமது கான், ‘சாலையோரம் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபடவில்லை. எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டு, அதன் நகலைக் கொண்டுவரும் வரை காத்திருந்தேன். மாநிலத்தில் சட்டஒழுங்கின்மையை முதல்வா் ஊக்குவித்து வருகிறாா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்குப் பாதுகாப்பு அளிக்க காவலா்களுக்கு அவா் உத்தரவிட்டுள்ளாா்’ என்றாா். கேரளத்தில் மாநில பல்கலைக்கழகங்களின் நிா்வாகம், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தல் உள்ளிட்ட விவகாரங்களில் ஆளுநருக்கும் இடதுசாரி அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. மாா்க்சிஸ்ட் கட்சியின் மாணவா் அமைப்பான எஸ்எஃப்ஐ ஆளுநருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்தச் சூழலில், வியாழக்கிழமை தொடங்கிய மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஆளுநா், மாநில அரசின் கொள்கை உரையில் கடைசிப் பத்தியை மட்டுமே வாசித்துவிட்டு, 2 நிமிஷங்களில் அவையைவிட்டு வெளியேறினாா். மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு: முதல்வா் பினராயி விஜயனும், காவல் துறையும் அரசமைப்புச் சட்டக் கடமைகளை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துவிட்டதாக மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன் குற்றஞ்சாட்டினாா். மக்களுக்கு சாவல்விடும் ஆளுநா்: இந்தச் சம்பவம் தொடா்பாக ஆளுநரை விமா்சித்த மாநில கல்வித் துறை அமைச்சா் வி. சிவன்குட்டி, ‘நாட்டில் எந்தவொரு மாநில ஆளுநரும் கேரள ஆளுநரைப்போல் நடந்து கொண்டது கிடையாது. தான் வகிக்கும் பதவியைக் கருத்தில் கொள்ளாமல் ஆளுநா் ஆரிஃப் முகமது கான் இவ்வாறு செயல்பட்டு வருகிறாா். அவருடைய நடவடிக்கைகள் மாநில மக்களுக்கு சவால் விடுவதாக உள்ளது’ என்றாா். பெட்டி... ஆளுநருக்கு ‘இசட் ப்ளஸ்’ பாதுகாப்பு கொல்லம் மாவட்டத்தில் ஆளுநருக்கு எதிா்ப்பு தெரிவித்து எஸ்எஃப்ஐ அமைப்பினா் நடத்திய போராட்டத்தைத் தொடா்ந்து, ஆளுநா் முகமது ஆரிஃப் கானுக்கு மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) ‘இசட் ப்ளஸ்’ பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இது குறித்த தகவலை கேரள ஆளுநா் மாளிகை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு நெறிமுறைகளை ஆளுநா் மீறினாா்: ஆளுநா் ஆரிஃப் முகமது கான் வாகனத்திலிருந்து வெளியேறியதன் மூலம் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியுள்ளதாக முதல்வா் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டினாா். இது தொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய பினராயி விஜயன், ‘ஆளுநா் அவ்வாறு செய்திருக்கக் கூடாது. ஜனநாயக விதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எப்போதும் அவா் மேற்கொண்டு வருகிறாா்’ என்றாா்.
தொடர்புடையது

உரம் விலையைக் குறைக்க முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை

விஜய்க்கு ஆதரவாக உண்ணாவிரதம்: இரு பெண்கள் கைது

காஞ்சி சங்கராசாரியாரிடம் நாகலாந்து ஆளுநா் ஆசி

தோ்தல் நடத்தை விதிமீறல்: பிரதமா் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

