பிரதமர் நரேந்திர மோடியின் படம் அச்சிடப்பட்ட பைகளில் விரைவில் பொது வழங்கல் திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படவிருக்கிறது.
இதற்காக மாநில அலுவலகங்களுக்கு இந்திய உணவு உற்பத்திக் கழகம் தேவையான அறிவுறுத்தலைத் தெரிவித்துள்ளது. பிரதமரின் படம் அச்சிட்ட பைகளைக் கொள்முதல் செய்வதற்கான கேட்புகளைக் கோருமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, சில மாநிலங்களில் மோடியின் புகைப்படத்துடன் பைகளை அச்சிடுவதற்கான டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் வழங்கப்பட்டும்விட்டன.
நாடு முழுவதும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் பிரதம அமைச்சரின் அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் பயனர்கள் ஏறத்தாழ 81.35 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கும் (பிஎம்ஜிகேஒய்) திட்டத்தின் பகுதி இது.
வருகிற மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து தேர்தல் வியூகமாக இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
செயல்பாட்டாளர் அஜய் போஸ் தகவல் அறியும் ஆணையத்தில் பெற்ற குறிப்பில், ராஜஸ்தான் மாநிலம் ரூ.13.29 கோடி மதிப்பிலான செயற்கை இழைப் பைகளுக்கு ஆணை கொடுத்துள்ளது. பை ஒன்றுக்கு ரூ.12.375 என்ற கணக்கில் 1.07 கோடி எண்ணிக்கையிலான பைகள் கொள்முதல் செய்யவுள்ளது.
ராஜஸ்தான் 5 ஒப்பந்ததாரர்களுக்கு ஏலம் விடுத்த நிலையில், நாகலாந்து ஒரு நிறுவனத்துக்கு பை ஒன்றுக்கு ரூ. 9.30 என்கிற செலவில் கொள்முதல் ஆணை விடுத்துள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி மோடியின் படத்துடன் தானியங்கள் வழங்கத் திட்டமிட்டுள்ளதாக நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வழங்கல் அமைச்சக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு 1.14 கோடி பைகளுக்கு கேட்புகள் கோரியுள்ளது. மகாராஷ்டிரம் இன்னும் இறுதி செய்யவில்லை.
கடந்த மாதம், நியாய விலைக் கடைகளில் மோடியின் புகைப்படத்துடன் செல்பி எடுப்பதற்கான பதாகை அமைக்க மத்திய அரசு கோரியதை கேரளம் நிராகரித்தது.
அதற்கு முன்பு மேற்கு வங்கம், பொது மக்களுக்கு அளிக்கப்படும் ரேஷனில் மோடி படம் அச்சிட மறுத்து விட்டது.
2021-ல் மோடியின் படம் கரோனோ தடுப்பூசிகளில் அச்சிடப்பட்டது பெரிய சர்ச்சையை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.