வாய்மையே இறுதியில் வெல்லும்: பஞ்சாப் முதல்வர்!
சண்டீகர் மேயர் தேர்தல் முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், உண்மையே இறுதியில் வெல்லும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகத்துக்கும் சண்டீகர் மக்களுக்கும் கிடைத்த வெற்றி இது என ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் குமார் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை சண்டீகர் மேயராக குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் கொண்டாடங்கள் நடைபெற்றன.
சண்டீகர் மேயர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் அதிகாரி தவறு இழைத்ததாகவும் அவர் மீது குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இது குறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அவரது எக்ஸ் பக்கத்தில், “இறுதியில் வாய்மை வென்றுள்ளது. சண்டீகர் மேயர் தேர்தல் வழக்கில் தேர்தல் அதிகாரியால் செல்லாது என அறிவிக்கப்பட்ட எட்டு வாக்குகளைப் பெற்ற ஆம் ஆத்மியின் குல்தீப் குமாரை மேயராக அறிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை வரவேற்கிறோம். வெளிப்படையாக நடந்த பாஜகவின் போக்கிரிதனத்துக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்” எனத் பதிவிட்டுள்ளார்.
இது ஜனநாயகத்தின் வெற்றி எனவும் சண்டீகர் மக்களுக்கு அவர் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.