உலகளவில் பல்வேறு நிறுவனங்கள் செய்யறிவு தொழில்நுட்பப் போட்டியில் தீவிரம் காட்டிவரும் நிலையில், முகேஷ் அம்பானியும் களத்தில் இறங்கியுள்ளார். 22 இந்திய மொழிகள் பேசும் அனுமன் செய்யறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமையான முகேஷ் அம்பானி, 22 இந்திய மொழிகள் பேசும் அனுமன் எனும் புதிய செய்யறிவு தொழில்நுட்பத்தை கடந்த செவ்வாய்க் கிழமை அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஐஐடி பாம்பே மற்றும் இதர 8 தொழில் நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த அனுமன் செய்யறிவு தொழில்நுட்பத்தை முகேஷ் அம்பானியின் சீதா லட்சுமி சுகாதார மையம் அறிமுகப்படுத்தியது.
இந்த செய்யறிவுத் தொழில்நுட்பத்தில் வெறும் எழுத்து வடிவிலான உரையாடல்கள் மட்டுமின்றி, குரல் மற்றும் காணொலிகள் வாயிலாக தகவல் பறிமாற்றம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனுமன் செய்யறிவு அடுத்த மாதம் பொதுப் பயன்பாட்டிற்கு அறிமுகமாகிறது. சாட் ஜிபிடியைப் போன்று கட்டணங்கள் எதுவுமின்றி இதனைப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவான தரவுத் தேடல்கள் மட்டுமின்றி, நிறுவனங்கள் தங்கள் தொழில்நுட்பங்களை அனுமன் ஏ.ஐ-யுடன் இணைத்து செயல்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 11 மொழிகளில் பயிற்சி பெற்றுள்ள இந்த தொழில்நுட்பம் விரைவில் 22 மொழிகளில் பயிற்சி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் ஓலாவின் க்ருட்ரிம் மற்றும் ஐஐடி மெட்ராஸின் ஐரவாதா ஆகிய செய்யறிவுகள் போட்டியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.