கேரளத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்தில் திடீரென தீப்பிடித்ததால் அதில் பயணித்த பயணிகள் அச்சமடைந்தனர்.
கேரள மாநிலத்தில் காயம்குளத்துக்கும் ஆலப்புழாவுக்கும் இடையே இயங்கி வந்த அரசுப் பேருந்து இன்று காலை திடீரென தீப்பற்றியது. பேருந்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதைக் கண்ட ஓட்டுநர் அனைவரையும் விரைவாக இறங்குமாறு கூறியதால் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். பின்னர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று காயம்குளம் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் கூறுகையில், இன்ஜின் ஒலியில் மாற்றம் இருப்பதைக் கண்டதாகவும், எனவே, பேருந்தை சாலையோரம் நிறுத்தினேன். அப்போது பின்பகுதியில் இருந்து அடர்ந்த புகை வெளியேறியதை பக்கவாட்டு கண்ணாடியில் பார்த்தேன்.
உடனே பேருந்தில் இருந்த அனைவரையும் இறங்கச் சொன்னேன். பேருந்தில் சுமார் 44 பயணிகள் இருந்தனர். அவர்களில் சுமார் 20 பேர் கல்லூரி மாணவர்கள், அவர்கள் அடுத்த நிறுத்தத்தில் இறங்கவிருந்தனர் என்று அவர் குறிப்பிட்டார். பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் உடனே இறக்கிவிடப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.