விசாகப்பட்டினம்: இந்திய கடற்படை அண்மையில் கொள்முதல் செய்திருந்த ஆழ்கடல் மீட்பு வாகனத்தின் மூலம், 1971ஆம் ஆண்டு கடலில் மூழ்கிய பாகிஸ்தானின் நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த போரின் போது 1971ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி பாகிஸ்தான் நீர்மூழ்கிக் கப்பல் பிஎன்எஸ் காஸி கடலில் மூழ்கியது.
தற்போது விசாகப்பட்டினத்திலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில், கடலுக்கு அடியில் இந்த கப்பலின் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அமெரிக்காவிடமிருந்து பாகிஸ்தான் பெற்ற இந்த நீர்மூழ்கிக் கப்படலில் கடலில் மூழ்கும்போது அதில் 11 அதிகாரிகள் உள்பட 93 பேர் இருந்துள்ளனர்.
இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த வந்த இந்தக்க் கப்பலை, இந்தியாவின் ஐஎன்எஸ் ராஜ்புத் கப்பல் எதிர்கொண்டு தாக்கியது. இதனால், அந்தக் கப்பல் கடலில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், பாகிஸ்தான் ராணுவமும், கப்பலில் இருந்த வெடிபொருள்கள் திடீரென வெடித்து அதனால் கப்பல் கடலில் மூழ்கியதாகக் கூறி வருகிறது.