திருவனந்தபுரம்: ஆற்றுக்கால் பொங்கல் விழா நாளை கொண்டாடப்படவிருக்கும் நிலையில், கேரளத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பெண்கள் திருவனந்தபுரத்தில் குவியத் தொடங்கியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் நடைபெறும் இந்த ஆற்றுக்கால் பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
கோயிலைச் சுற்றிலும் இருக்கும் தெரு முழுவதும் ஆயிரக்கணக்கான பெண்கள் விறகு அடுப்பில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபடுவார்கள்.
நாளை இந்த நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் நிலையில், இன்று காலை முதலே பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பெண்கள் திருவனந்தபுரத்தில் குவியத் தொடங்கினர்.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால், பொங்கல் வைக்க உகந்த இடத்தைத் தேர்வு செய்ய சில பெண்கள் வியாழக்கிழமையன்றே வந்துவிட்டதாகவும், சர்க்கரைப் பொங்கல் செய்ய அரிசி, வெள்ளம், கொப்பரைத் தேங்காய் உள்ளிட்ட பொருள்களை வாங்கித் தயாராக வைத்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் 10 நாள்கள் திருவிழாவின் இறுதிநாளன்று இந்த பொங்கல் வைபவம் நடைபெறுகிறது. பெண்களின் சபரிமலை என்றும் இந்தக் கோயில் அழைக்கப்படுகிறது.
இந்த ஆண்டு இந்நிகழ்வின் கூடுதல் சிறப்பு என்னவென்றால், கோயிலுக்கு அருகே உள்ள சில தேவாலயங்கள் தங்களது வெளி அரங்குகளை நாளை பொங்கல் வைக்க ஏதுவாக திறந்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.