அயோத்தி ராமரை தரிசிக்க அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் பாலராமரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கூட்டம் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் மூலவர் பால ராமர் சிலை பிரதிஷ்டை ஜன.22-ம் தேதி நடைபெற்றது. இந்த கோலாகல நிகழ்ச்சியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர்.
பால ராமரை தரிசிக்க அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் அயோத்தியில் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், சனிக்கிழமையான இன்று ஸ்ரீபால ராமரைக் காண பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பக்தர் ஒருவர் கூறுகையில், ஸ்ரீராமரை தரிசனம் செய்தது மனநிறைவாக உள்ளது. இந்த தரிசனம் அருமையாகவும், அமைதியாகவும் இருந்தது. கடவுள் அருளால் நேற்று மாலையும், இன்று காலை மீண்டும் தரிசனம் செய்தேன். கோயில் பிரமாண்டமாக உள்ளது மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் என்று உணர்ச்சி பொங்க கூறினார்.