லக்னௌ: வினாத்தாள் கசிந்ததைத் தொடர்ந்து, அண்மையில் நடந்த தலைமைக் காவலர் எழுத்துத் தேர்வை உத்தரப்பிரதேச அரசு ரத்து செய்துள்ளது.
பிப்ரவரி 17-18ஆம் தேதிகளில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலைமைக் காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இந்த நிலையில், தேர்வெழுதிய இளைஞர்கள், தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
தொடர் போராட்டம் காரணமாக, தலைமைக் காவலர் எழுத்துத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், இது குறித்து விசாரணை நடத்த சிறப்பு அதிரடிப் படை அமைக்கப்படும் என்றும் உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த தேர்வில் கிட்டத்தட்ட 48 லட்சம் இளைஞர்கள் பங்கேற்றிருந்த நிலையில், தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மோசடி செய்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.