ஆந்திரத்தில் டயர் பஞ்சராகி நின்றுகொண்டிருந்த டிரக் மீது பேருந்து மோதியதில் 4 பேர் பலியாகினர்.
ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டத்தில் படலெம்மா கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் டயர் பஞ்சராகி நின்றுகொண்டிருந்த டிரக் மீது பேருந்து திங்கள்கிழமை காலை மோதியது. இந்த சம்பவத்தில் 4 பேர் பலியானார்கள்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, அன்னவரத்தில் இருந்து ராஜமகேந்திராவரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரியின் டயர் பஞ்சரானதால் பழுது நீக்குவதற்காக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.
அப்போது விசாகாவில் இருந்து ராஜமகேந்திராவரம் நோக்கிச் சென்ற பேருந்து, லாரியை கவனித்துக் கொண்டிருந்த மூன்று பணியாளர்கள் மீது மோதியது.
மேலும், அதே வழியில் எதிர்திசையில் இருந்து வந்த மற்றொருவர் மீதும் மோதியது. இந்த விபத்தில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.